குற்றியலுகரம் புரிந்ததா? (முதல் பாடத்தை நன்றாகப் புரிந்துகொண்ட
பின்பே இதற்கு வரவும். இதே விதியை அனைத்துப் பாடங்களுக்கும் பின்பற்றுதல் பொதுவாக நலம்!)
எழுத்தில் மீதம் இருப்பது ஒன்றுதான் – குற்றியலிகரம்.
இது எளிமையானது: குற்றியலுகரம் வந்து அதற்குப் பிறகு ‘யகர’த்தில் தொடங்கும் சொல் வந்தால் குற்றியலுகரத்தின் ‘உகரம்’ ‘இகர’மாக மாறிவிடும், அப்படி மாறிய இகரமே குற்றியலிகரம் (இதுவும் அரைமாத்திரை அளவே ஒலிக்கும்!)
நாடு – குற்றியலுகர இறுதி,
யாது – யகரமெய் தொடக்கம், இரண்டும் புணர்ந்தால்?
நாடு + யாது = நாடியாது (உ->இ ஆனதைக் கவனிக்க)
இந்த ‘டி’-இல் உள்ள ‘இ’-தான் குற்றியலிகரம் (எல்லா ‘டீ’யில் விழும் எல்லா ஈ-யும் குற்றியலிகரம் அல்ல!)
கவனிக்க: தமிழின் அரிதான சில சொற்களில் புணர்ச்சி இல்லாமலே வரும் குற்றியலிகரமும் உண்டு: ‘மியா’ என்ற சொல்லில் (’கேண்மியா’, ’சொன்மியா’ என்று வரும் வினை வடிவங்கள்!) வரும் ‘இ’ குற்றியலிகரம். ஆனால் இவை பெரும்பான்மையும் வழக்கற்றுவிட்டதால் நாம் இவற்றைப் பற்றி அவ்வளவாக கவலைப்பட வேண்டாம் (இப்போதைக்கு!))
கு.உ, கு.இ எல்லாம் முடிந்ததா! எதற்காக இதில் தொடங்கினோம்? செய்யுள் (இலக்கணம் அமைந்த கவிதை) என்று வரும்பொழுது அதன் எழுத்துக்களின் எண்ணிக்கையும் அளவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவை (மாத்திரை) முன்பே பார்த்தோம். கு.உ, கு.இ ஆகியவை தமக்கு இயல்பான மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிப்பவை, எனவே இவற்றைச் செய்யுளில் கையாள்வதில் கவனம் தேவை…
செய்யுளின் ஒவ்வொரு உயிரும் உயிர்மெய்யும் ஒரு எழுத்தாக கொள்ளப்படும், உயிர் இல்லாத மெய்கள் எண்ணப்படா (’உயிர்’ ‘மெய் [உடம்பு]’ என்ற பெயரே எத்தனை ஆழ்ந்த அர்த்தத்தோடு அமைக்கப்பட்டுள்ளது பாருங்கள்!)
அதாவது செய்யுளைப் பொறுத்தவரை ‘அம்மா’ 2 எழுத்து, ‘ஆமா’வும் 2 எழுத்து! அரை மாத்திரை அளவுள்ள மெய்கள் எண்ணப்படாததைப் போல, அரை மாத்திரை அளவுள்ள கு.உ, கு.இ ஆகியனவும் எழுத்தாகக் கொள்ளப்படா. ஆனால் அதற்கு ஒரு சின்ன விதி இருக்கிறது… என்ன?
குற்றியலுகரத்திற்குப் பிறகு உயிரெழுத்து வந்தால் அந்தக் கு.உ மெய்போல கொள்ளப்படும் (உண்மையில் அது மெய்தான், காரணம் உயிர்வந்தால் உகரம் போய்விடும்… பொறுமை, கீழே விளக்குகிறேன்…)
பொட்டு + இட்டான் = பொட்டிட்டான்
பொட்டு + இட்டான் => பொட்ட் + இட்டான் (உயிரெழுத்து வந்தால் குற்றியலுகர ‘உ’ போய்விடும்!)*
பொட்ட் + இட்டான் => பொட்டிட்டான் (உகரம் போனபின் நிற்கும் வல்லின மெய்யெழுத்தின் மீது வரும் உயிர் ஏறிக்கொள்ளும், இயல்பு புணர்ச்சி!)
*இவ்விதி கொஞ்சம் முக்கியமானது, இதை இன்னும் விளக்கமாக ‘தளை’களைப் பற்றிப் பேசுகையில் பார்க்கலாம்!
தாக்கு + அணங்கு = தாக்கணங்கு (4 எழுத்து)
கொக்கு + ஆயிரம் = கொக்காயிரம் (4 எழுத்து)
வந்து + ஈந்தான் = வந்தீந்தான் (3 எழுத்து)
போட்டு + உடைத்தான் = போட்டுடைத்தான் (4 எழுத்து)
உண்டு + என்றான் = உண்டென்றான் (3 எழுத்து)
படகு + ஓட்டி = படகோட்டி (4 எழுத்து)
இதற்கு மாறாய், கு.உ-க்குப் பின் உயிர்மெய் வந்தால் (சொல்லின் முதலில் மெய்யெழுத்து வரவே வராது!) அது அப்படியே புணரும், அப்போது அது எழுத்தாகக் கொள்ளப்படும்…
போட்டு + கொண்டான் = போட்டுக்கொண்டான் (4 எழுத்து)
உண்டு + சென்றான் = உண்டுசென்றான் (4 எழுத்து)
[போட்டுக்கொண்டான் என்பதில் ‘க்’ வந்தது ‘வல்லினம் மிகுதல்’ என்ற இலக்கணத்தால். இதைப் பற்றி எழுத்திலக்கணத்தில் கற்கலாம். விரும்பினால் நன்னூல் படிக்கலாம்.]
சரியா?
எழுத்துக்கு அடுத்து அசை. அசைதல் என்றால் பொருந்துதல். எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தி இருப்பது அசை. ஆங்கிலக் கவிதை இலக்கணத்தில் ‘Syllable’ என்பதற்குச் சமானமான ஒரு விஷயம் இந்த ‘அசை’. (வடமொழி, பண்டைய கிரேக்க செய்யுளியல்களிலும் இதற்கு நிகரான அமைப்புகள் உண்டு!)
’அசை’யைப் பலவிதமாக விளக்கலாம், நான் என் வழியில் செய்யப் போகிறேன் (என் வழி மொழியியல் வழி! Linguistic approach!)
ஒரு சொல்லை எழுத்து எழுத்தாக எழுதினாலும், அதனை உச்சரிக்கும் போது மொத்தமாகத்தான் உச்சரிக்கின்றோம் (படிப்பதும் அப்படித்தான், எழுத்துக்கூட்டிப் படிப்பதில்லை!)
‘அம்மா’ என்ற சொல்லை ‘அ-ம்-ம்-ஆ’ என்று உச்சரிப்பதில்லை நாம், ‘அம்மா’ என்று ஒரே மூச்சில் சொல்லிவிடுகிறோம், சரியா? இதையே இன்னும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் சிறுசிறு இடைவெளிகள் விடுகிறோம் என்பது தெரியும்… அதாவது ‘அம்-மா’ என்று இரண்டு கூறுகளாய் அச்சொல்லை நாம் உச்சரிப்போம்… இந்த இரண்டு கூறுகளே இரண்டு அசைகள்!
‘அம்’ ஒரு அசை, ‘மா’ ஒரு அசை! (எழுத்துக்களின் இந்த உச்சரிப்புக் கூட்டணிதான் ‘அசை’! Syllable!)
அசைகளை எப்படி அடையாளம் காண்பது?
ஒரே சிறந்த வழி ‘உச்சரித்து’ப் பார்ப்பதுதான்.
வேண்டுமானால் சில குறுக்குவழிகள்^ சொல்லித்தரலாம்:
- அ) சொல்லின் இடையில் எங்கெல்லாம் மெய்யெழுத்து வருகிறதோ அங்கெல்லாம் ஒரு அசை முடியும். (அம்மா – ‘அம்’ ஒரு அசை!)
- ஆ) இரண்டு குறில்கள் அடுத்தடுத்து வந்துவிட்டால் அது ஒரு அசை (’தகடு’ – ‘தக’ ஒரு அசை, மிச்சமிருக்கும் ‘டு’ ஒரு அசை)
- இ) குறில் நெடிலும் ஒரு அசை (’விடாது’ – ‘விடா’ ஒரு அசை!)
- ஈ) நெடில் தனியாக வந்தால் ஒரு அசை (’நாடு’ – ‘நா’ ஒரு அசை, மீதி ‘டு’ ஒரு அசை!)
^குறுக்குவழி என்ற சொல்லை நான் ‘Short-hand’, ‘Thumb Rule’, ‘Short
Cut’ போன்ற பொருளிலேயே இங்கே கையாள்கிறேன், ‘கெட்ட வழி’ என்ற பொருளில் அல்ல!
அசைகள் எப்படியெல்லாம் அமையலாம்?
1. குறில் மெய் – ‘அம்’ (அம்-மா)
2. குறில் குறில் – ‘தக’ (தக-டு)
3. குறில் குறில் மெய் – ‘உனக்’ (உனக்-கு)
4. நெடில் – ‘நா’ (நா-டு)
5. நெடில் மெய் – ‘காட்’ (காட்-டு)
6. குறில் நெடில் – ‘விடா’ (விடா-து)
7. குறில் நெடில் மெய் – ‘கொடாக்’ (கொடாக்-கண்-டன்)
8. குறில் (இது சொல்லின் முதலில் வராது, இறுதியில் ஒரே ஒரு குறில் மட்டும் மிச்சமிருந்தால் அது ஒரு அசையாகிவிடும், மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் ‘டு’, ‘கு’, ‘து’ போல!)
ஒரு சொல்லின் அசைகளை அடையாளம் கண்டுகொள்வது செய்யுளை இயற்ற/அலச மிகத் தேவையான திறன். மேலே அ-ஆ-இ-ஈ என்று சொன்ன வரிசையில் பழகுங்கள். அதாவது, முதலில் மெய் வரும் இடமெல்லாம் ஒரு அசை, பின் இரண்டு குறில் வருவது, பின்னர் குறில் நெடில் – இப்படி பழகினால் எளிது:
கேட்டுக்கொண்டிருந்தான் – இதனை அசை பிரிப்போமா?
ட், க், ண், ந், ன் – இவை இருக்கும் இடமெல்லாம் ஒரு கோடு போடுவோம், இதெல்லாம் ஒரு அசை:
கேட்/ டுக்/ கொண்/ டிருந்/ தான் – அவ்வளவுதான்!
இதிலே என்னென்ன அமைப்புகள் எல்லாம் உள்ளன?
/கேட்/ - 5
/டுக்/ - 1
/கொண்/ - 1
/டிருந்/ - 3
/தான்/ - 5
சரியா? இன்னொரு சொல்: நதியோடுநீசெலுத்து
முதலில் ‘நதி’ என்ற இரண்டு குறில்கள், ஒரு அசை /நதி/
அடுத்து ‘யோ’ நெடில், ஒரு அசை /யோ/
அடுத்து ’டுநீ’ குறில் நெடில், ஒரு அசை /டுநீ/
அடுத்து ’செலுத்’ குறில் குறில் மெய், ஒரு அசை /செலுத்/
மீதி இருக்கும் ’து’ ஒரு அசை /து/ அவ்வளவுதான்!
நதியோடுநீசெலுத்து => நதி/ யோ/ டுநீ/ செலுத்/ து
/நதி/ - 2
/யோ/ - 4
/டுநீ/ - 6
/செலுத்/ - 3
/து/ - 8
புரிந்ததா? (”இல்லை!” என்றால் பொறுமையாக பேப்பர் பேனாவுடன் இன்னும் ஒரு முறை படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிபடவில்லை என்றால் என்னைத் தொடர்புகொள்க!)
வீட்டுப்பாடம்(? ஹா ஹா!) தருவதற்கு முன் ஒரே ஒரு செய்தி:
இந்த அசைகளுக்குப் பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர், அட! ‘நேர்’ ‘நிரை’ என்று பெயர். (மெய்யெழுத்தைக் கணக்கிடாமல்) அசையில் ஒரே ஒரு எழுத்து இருந்தால் அது ‘நேர்’, இரண்டு இருந்தால் அது ‘நிரை’ (இந்தப் பெயர்களே அந்தந்த அசைக்கு எடுத்துக்காட்டாய் அமைவதைக் கவனிக்க, இது தற்செயல் அல்ல!)
1, 4, 5, 8 – நான்கும் நேரசைகள் (’உன்’, ‘நீ’, ‘தூள்’, ‘து’)
2, 3, 6, 7 – நான்கும் நிரையசைகள் (’பகு’, ‘சினம்’, ‘நிலா’, ‘பளார்’)
இனி பயிற்சி:
வேறென்ன! கீழ் காணும் சொற்களை அசை பிரிக்கவும்! ’நேர்’, ’நிரை’ என்று குறிப்பிடவும்:
எ-டு.: திருவள்ளுவர் – திரு/வள்/ளுவர் – நிரை/நேர்/நிரை
- நீ
- நான்
- நிலா
- காற்று
- ஆழ்ந்த
- ஆகாயம்
- இடபாரூடர்
- சித்தமெலாம்
- தேர்ந்தெடுத்த
- வண்ணமயம்
- எழுத்தெல்லாம்
- பகற்றவச்சிறிதே
- அக்கினிக்குஞ்சொன்று
- கொங்குதேர்வாழ்க்கை
- உலகெலாமுணர்ந்தோதற்கரியவன்
- தக்கத்தகதகதாம்
[விருப்பமும் நேரமும் இருந்தால் ‘திருக்குறள்’ ‘புறநானூறு’ ஆகிய நூல்களில் இருந்து சொற்களைத் தேர்ந்தெடுத்து அசை பிரித்துப் பார்க்கவும்… அதையும் இங்கே இட்டால் சரியா தவறா என்று சொல்ல நான் தயார்!]
ஆழ்ந்த நுட்பமான விளக்கம் நன்றி
பதிலளிநீக்குநன்றி... :-)
நீக்கு