12.25.2015

பாடம் - 3: சீர்


எழுத்து, அசைபார்த்தாச்சு, அடுத்து?  சீர்.

எழுத்துகள் சேர்ந்து அசையாகும், அசைகள் சேர்ந்து சீராகும்.

பேச்சில் ‘சொல்’ என்பதற்கு இணையாக கவிதையில் ‘சீர்’ (ஒரு சீர் ஒரு சொல்லாகவும் இருக்கலாம், சில சொற்களின் கூட்டாகவும் இருக்கலாம், ஒரு சொல்லே இரண்டு சீராக பிரிந்தும் இருக்கலாம்!)

அசைகள் இரண்டு என்று பார்த்தோம் (அதாங்க, ‘நேர்’ & ‘நிரை’.) இந்த இரண்டும் எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் சேர்ந்து சீராகலாம், ஆனால் நான்கு அசைகளுக்கு மேல் இருக்கும் சீர்கள் அத்தனை சிறப்பில்லாதவை என்று நம் முன்னோர் ஒதுக்கிவிட்டார்கள் (நாலசையே அவ்வளவா தேவைப்படாது, மூனு அசைவரைதான் தனித்தன்மையோட இருக்கும், நாலசைச் சீர்கள் ஒலிக்கும் போது இரண்டு இரண்டசைச் சீர் மாதிரி ஒலிக்கும் வாய்ப்பு இருக்குல!)

‘நேர்’ ‘நிரை’ ஆகிய இரண்டு அசைகளையும் ‘அசைச்சீர்’ என்று சொல்லலாம் (அதாவது ஒரே ஒரு அசை இருக்குற சீர்!)

இது இரண்டோடு குற்றியலுகரம் சேர்ந்து வருவதும் உண்டு, அதெல்லாமும் அசைச்சீராகவே கொள்ளப்படும்.
  • நேர் + கு.உ = நேர்பு (பற்று, பாடு, பாட்டு) 
  • நிரை + கு.உ = நிரைபு (உலகு, கலப்பு, தராசு, நடாத்து) 
ஆனா, இந்த நேர்பு, நிரைபு ஒரே ஒரு இடத்துலதான் அப்படி சொல்லப்படும், அது (அப்பறம் சொல்றேனே…)

இனி நாம ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் வர சீர்களைப் பார்க்கலாம்…

உங்களுக்குக் கணினியில் பயன்படுத்தப்படும் ‘பைனரி’ (இருமம்; ‘இருமல்’ இல்லீங்க, ‘இருமம்’!) கணக்கு தெரியுமா? நம்ம சீர் வாய்ப்பாடும் அது போலவேதான் இருக்கும்…

முதல்ல சீர்களைப் பார்ப்போமா?  

இரண்டு அசைகள் வரும் சீர்கள்: ஈரசைச் சீர் 
2^2 = 4 சீர்கள் வரும்:

ஈரசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர் தேமா தே/மா 00
நிரை.நேர் புளிமா புளி/மா 10
நிரை.நிரைகருவிளம்கரு/விளம்11
நேர்.நிரைகூவிளம்கூ/விளம்01


சீர்களுக்கு நம் முன்னோர் அழகாகப் பெயர்களும் வைத்துள்ளனர் பாருங்கள். இவை ஏனோதானோ பெயர் அல்ல, இந்தப் பெயர்களே அந்தந்த சீர்களுக்கான எடுத்துக்காட்டு (அசை பிரித்து உள்ளது பாருங்கள், 3வது வரிசை) இதனால் இப்பெயர்கள் ‘வாய்ப்பாடு’ என்றும் அழைக்கப்படும் (’வாய்ப்பாடு’ - கிட்டத்தட்ட Mnemonic!)
’பைனரி’ வாய்ப்பாட்டையும் கவனிக்கவும்! 0 – நேர், 1 – நிரை!

மூன்று அசைகள் வரும் சீர்கள்: மூவசைச் சீர்
2^3 = 8 சீர்கள்:

மூவசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர்.நேர் தேமாங்காய்தே/மாங்/காய் 000
நிரை.நேர்.நேர் புளிமாங்காய் புளி/மாங்/காய் 100
நிரை.நிரை.நேர் கருவிளங்காய் கரு/விளங்/காய் 110
நேர்.நிரை.நேர் கூவிளங்காய் கூ/விளங்/காய் 010
நேர்.நேர்.நிரை தேமாங்கனிதே/மாங்/கனி 001
நிரை.நேர்.நிரை புளிமாங்கனி புளி/மாங்/கனி 101
நிரை.நிரை.நிரை கருவிளங்கனி கரு/விளங்/கனி 111
நேர்.நிரை.நிரை கூவிளங்கனி கூ/விளங்/கனி 011


சீர்களையும் அவற்றின் பெயர்களையும் நன்றாக உள்வாங்கிக் கொள்க! (இது மிக எளிதுதான்!)

சீர்களின் வாய்ப்பாட்டில் இன்னொரு வசதியும் உள்ளது:
சீர்களின் ‘தன்மை’ பெரும்பான்மையாக அதன் இறுதி அசையினால் வருவது, எனவே சீர்களின் பெயர்களின் இறுதியைச் சொல்வதன் மூலம் நாம் ஒரு சீர்த் தொகுதியையே சுட்டிக் காட்ட இயலும்…

எடுத்துக்காட்டாய், ‘மாச் சீர்’ (அல்லது ‘மா’) என்றால் ‘தேமா’ ‘புளிமா’ ஆகிய இரண்டு ஈரசைச் சீர்களும் குறிக்கப்படும், இரண்டிலுமே ‘நேர்’ இறுதியாக இருப்பது (’மா’ = ‘நேர்’ என்பதையும் கவனிக்க!) அதே போல, ’கனிச்சீர்’ என்றால் ’தேமாங்கனி’, ‘புளிமாங்கனி’, ‘கருவிளங்கனி’, ‘கூவிளங்கனி’ ஆகிய (நிரை இறுதியாகிய) நான்கு மூவசைச் சீர்களும் குறிக்கப்படும் (இப்படியே ‘விளச் சீர்’, ‘காய்ச் சீர்’ என்பதும்!)

மூவசைச் சீர்கள் எட்டோடும் இறுதியில் ‘நேர்’ மற்றும் ‘நிரை’ இரண்டில் ஒன்றைச் சேர்த்தால் பதினாறு நாலசைச் சீர்கள் வரும். இவை அவ்வளவாக கவிதையில் கையாளப்படுவதில்லை, எனினும் இவற்றின் வாய்ப்பாடு கொஞ்சம் மாறுபடும், எனவே இவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைப்போம்…

நாலசைச் சீர்கள் - வாய்ப்பாடு
நேர்.நேர்.நேர்.நேர் தேமாந்தண்பூதே/மாந்/தண்/பூ 0000
நிரை.நேர்.நேர்.நேர் புளிமாந்தண்பூ புளி/மாந்/தண்/பூ 1000
நிரை.நிரை.நேர்.நேர் கருவிளந்தண்பூ கரு/விளந்/தண்/பூ 1100
நேர்.நிரை.நேர்.நேர் கூவிளந்தண்பூ கூ/விளந்/தண்/பூ 0100
நேர்.நேர்.நிரை.நேர் தேமாநறும்பூதே/மா/நறும்/பூ 0010
நிரை.நேர்.நிரை.நேர் புளிமாநறும்பூ புளி/மா/நறும்/பூ 1010
நிரை.நிரை.நிரை.நேர் கருவிளநறும்பூ கரு/விள/நறும்/பூ 1110
நேர்.நிரை.நிரை.நேர் கூவிளநறும்பூ கூ/விள/நறும்/பூ 0110
நேர்.நேர்.நேர்.நிரை தேமாந்தண்ணிழல்தே/மாந்/தண்/ணிழல் 0001
நிரை.நேர்.நேர்.நிரை புளிமாந்தண்ணிழல் புளி/மாந்/தண்/ணிழல் 1001
நிரை.நிரை.நேர்.நிரை கருவிளந்தண்ணிழல் கரு/விளந்/தண்/ணிழல் 1101
நேர்.நிரை.நேர்.நிரை கூவிளந்தண்ணிழல் கூ/விளந்/தண்/ணிழல் 0101
நேர்.நேர்.நிரை.நிரை தேமாநறுநிழல்தே/மா/நறு/நிழல் 0011
நிரை.நேர்.நிரை.நிரை புளிமாநறுநிழல் புளி/மா/நறு/நிழல் 1011
நிரை.நிரை.நிரை.நிரை கருவிளநறுநிழல் கரு/விள/நறு/நிழல் 1111
நேர்.நிரை.நிரை.நிரை கூவிளநறுநிழல் கூ/விள/நறு/நிழல் 0111


’காய்’ ‘கனி’-யோடே ‘பூ’ ‘நிழல்’ சேர்க்காமல் ஏன் நடுவில் மாற்றிவிட்டனர்?

என்னதான் வாய்ப்பாடாக இருந்தாலும் இவையும் அர்த்தமுள்ள சொற்களாக இருக்க வேண்டும் என்று எண்ணியே அப்படிச் செய்தனர்.

  • தேமா – தேன் போன்ற இனிய மா (மாம்பழம்) 
  • புளிமா – புளிப்பான மா (தேமா, புளிமா – மர வகைகளும் ஆகும்!) 
  • கருவிளம் – ஒரு வகை பூச்செடி (Blue pea) 
  • கூவிளம் – வில்வ மரம் 
  • தேமாங்காய், தேமாங்கனி – தேமாவின் காய், பழம் (கனி) – இப்படியே மற்றவையும்! 
  • ண்பூ – குளிர்ச்சியான பூ (தண்மை – குளிர்ச்சி; கவனிக்க 3 சுழி ணகரம்!)
  • நறும்பூ – வாசனையான பூ (நறு- = மணம், வாசனை) 
  • தண்ணிழல் (தண்+நிழல்) – குளிர்ச்சியான நிழல் (அதாவது, ‘தேமாதண்ணிழல்’ என்றால் தேமா மரத்தின் குளிர்ச்சியான நிழல் என்று பொருள் படும்! மற்றவையும் இப்படியே…) 
  • நறுநிழல் – வாசனையான நிழல்

(இதையெல்லாம் படிக்கும்போதே சுகமா தூக்கம் வரும் எனக்கு :-) உங்களுக்கும் தூங்கம் வந்தா நான் போடுற மொக்கை கூட காரணமா இருக்கலாம்!)

அப்பா… சீர் பற்றி எல்லாம் முடிந்ததா?

ஒரே ஒரு விஷயம் மட்டும் பாக்கி:
ஈரசைச்சீர்களுக்கு ’இயற்சீர்’, ‘ஆசிரியச் சீர்’, ‘ஆசிரிய உரிச்சீர்’ என்றெல்லாமும் பெயர்.
இயல்பான சீர்கள் என்பதால் இயற்சீர் என்று பெயர். இவை அதிகமாக ஆசிரியப்பாவில் வருவதால் மீதி இரண்டு பெயர். (வெண்பாவிலும் மற்ற பாக்களிலும் கூட இவை நிறையவே வரும். ஆனால், ஆசிரியப்பாவுக்கே இவை சிறப்பாக உரியவை, எனவே இந்தப் பெயர்கள்!)

மூவசைச் சீர்களுக்கு ‘உரிச்சீர்’ என்று பெயர். இந்த எட்டில், நான்கு காய்ச்சீர்களுக்கும் ‘வெண்பா உரிச்சீர்’ என்றும், நான்கு கனிச்சீர்களுக்கும் ‘வஞ்சியுரிச்சீர்’ என்றும் பெயர். (அந்தந்தப் பாக்களில் அமைவதால் இந்தப் பெயர்கள்!)

நாலசைச் சீர்களுக்குப் ‘பொதுச்சீர்’ என்று பெயர். இவை வஞ்சிப்பாவில் மட்டுமே வரும். (மற்ற பாக்களில் வந்தாலும் இரண்டு இயற்சீர்களாய்ப் பிரிந்து நிற்கும், எனவே அப்படியே கொள்ளப்படும். எடுத்துக்காட்டாய், ‘கடற்பிறகோட்டிய’ என்ற நாலசைச் சீர், ‘கடற்பிற(கு)’ ‘ஓட்டிய’ என்று ‘கருவிளம்’, ‘கூவிளம்’ சீர்களாய்க் கொள்ளப்படலாம்!)

மேலே சொன்னதெல்லாம் கீழே அட்டவணையாய்:

சீர்கள் இடம்பெறும் பாக்கள்
சீர்பெயர்இடம்பெறும் பா
ஈரசைச்சீர்இயற்சீர், ஆசிரிய உரிச்சீர்ஆசிரியப்பா
மூவசைச்சீர்உரிச்சீர்(கீழே காண்க)
--காய்ச்சீர்வெண்பா உரிச்சீர்வெண்பா, கலிப்பா
--கனிச்சீர்வஞ்சி உரிச்சீர்வஞ்சிப்பா
நாலசைச்சீர்பொதுச்சீர்வஞ்சிப்பா


[சீர், அதன் தன்மை, அமைப்பு புரிந்தால் போதும். இந்தப் பெயர்களையெல்லாம் இப்போதே மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மனப்பாடமே செய்யாவிட்டாலும் பரவாயில்லை! ‘நேர்நேர்’ சீர் என்பதைவிட ‘தேமா’ வசதி, அவ்வளவுதான்! கவிதை எழுதும்பொழுது இதெல்லாம் தேவைப்படாது! ஆனால், பின்வரும் பாடங்களை மேலும் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த கலைச்சொற்கள் (technical glossary) உதவும்!]

அவ்ளோதான்! ஆங்ங்ங்… ஒன்னு பாக்கி இருக்கே… பயிற்சி!

பேச்சுவாக்குல நாம் நான்கு பாக்களையும் குறிப்பிட்டுவிட்டோம் கவனிச்சீங்களா?
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா & வஞ்சிப்பா நாலும்தான் அவை.

இவைகளைப் பற்றி விளக்கமாக பின்னால் பார்ப்போம், இப்போதைக்கு ஆசிரியப்பாவைப் பற்றி மட்டும் சுருக்கமா, அடிப்படையா தெரிஞ்சுப்போம் (நல்லா கவனிங்க, இதான் ஹோம்வொர்க் – ஆசிரியப்பா இயற்றப் போறோம்…)

ஆசிரியப்பா:
மூன்று அடிக்குக் குறையாமல் இருக்கனும்.
3-றுக்கு மேல் எத்தனை அடி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர் இருக்கனும் (இயற்சீர், அதாங்க ஈரசைச்சீர் மட்டுமே! எப்பவாச்சு ‘காய்ச்சீர்’ வரலாம் தப்பில்ல, மத்த எதுவும் வரக்கூடாது, முக்கியமா ‘கனிச்சீர்’ வரவே கூடாது!)
எல்லா அடியிலும் நாலு சீர் வருவது நிலைமண்டில ஆசிரியப்பா. கந்த சஷ்டிக் கவசம் இந்த வகைதான்.
கடைசி அடிக்கு முன்னாடி அடி மட்டும் மூன்று சீர் வருவது நேரிசை ஆசிரியப்பா. சங்க இலக்கியம் பெரும்பான்மையும் இந்த வகை.
இதுல கடைசி அடியின் கடைசி சீர் ‘’ல முடியனும்.

எடுத்துக்காட்டு பாருங்க:

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று; 
நீரினும் ஆர்அள வின்றே - சாரல் 
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு, 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே! 
குறுந்தொகையின் 3வது பாடல்.
அழகான பாடல். விளக்கம் தேவையா? (கடைசியில் தருகிறேன்!)

முதலில் சீர்களைக் கவனியுங்கள்.

கருவிளம் புளிமா; கூவிளம் புளிமாங்காய்
கூவிளம் கூவிளம் தேமா – தேமா
புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா கூவிளங்காய் தேமா(ஏ)

<சொற்களைப் பார்த்தவுடன் அவற்றின் அசை அமைப்பும், வாய்ப்பாடும் தெரிந்துகொள்வது தேவை… இதையும் பயிற்சி செய்க! திருக்குறள், சங்க இலக்கிய பாடல்களை எடுத்துக்கொண்டு அசைபிரித்துச் சீர்களை இனம் கண்டு பயிற்சி செய்க! உங்கள் பயிற்சியை இங்கே பகிரலாம்…> 

மூன்று இடங்களில் காய்ச்சீர் வந்துள்ளது (முதல் அடியில் உள்ள ‘புளிமாங்காய்’ஐ ‘புளிமா’ என்றும் கடைசி அடியில் உள்ள ‘கூவிளங்காய்’ஐ ‘கூவிளம்’ என்று கொண்டாலும் சரிதான், காரணம் கடைசி அசை குற்றியலுகரம்!). மற்ற அனைத்தும் இயற்சீர்.

கடைசி அடியின் கடைசி சீர் ‘ஏகாரம்’ பெறுகிறது. இது சும்மா ‘ஏ’ என்று சொல்லிவிடுவது அன்று, பாட்டின் மொத்த உயிரும் அந்தக் கடைசி சொல்லில்தான் உளது, அதற்கு அழுத்தம் தரத்தான் இந்த ‘ஏ’ (நட்பே! இங்கே ’நட்பு’ என்பது ’காதல்’)

சரியா? ஆசிரியப்பா எழுதிப் பார்க்கத் தயாரா?

முதலில் நல்ல ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்க, பின் பாவாக புனைக! தொடக்கத்தில் சிறியதாக இருக்கட்டும் (நான்கு முதல் ஆறு அடிகள் வரை,) போகப் போக பெரியதாக எழுதலாம் (சங்க இலக்கியத்தில் 782 அடிகள் கொண்ட பாவும் உள்ளது! நான் 133 அடி கொண்ட ஒரு ஆசிரியப்பாவை எழுதியுள்ளேன்!) (கீழே எனது பா ஒன்றையும் தந்துள்ளேன்!)

வாழ்த்துகள்…

அடுத்த பாடம்: அடி 
*****************************************************
குறுந்தொகைப் பாடலின் விளக்கம்: (விருப்பமிருந்தால் படிக்கலாம்!) 

இது தலைவி சொல்வதாக அமைந்த பாடல். தலைவன் தலைவியைக் காதலிப்பது வெறும் புணர்ச்சிக்காகத்தான், அவன் இவளைத் திருமணம் செய்துகொள்ள மாட்டான் என்று இடித்துரைக்கிறாள் தோழி, அவளுக்குப் பதில் சொல்லும் விதமாக தங்கள் காதல் உயர்ந்தது என்று சொல்கிறாள் தலைவி, அதுதான் இந்தப் பாடல்:

பூமியைவிடப் பெரியது, வானத்தைவிட உயர்ந்தது கடலைவிட ஆழமானது எங்கள் காதல்! மலைச்சரிவில் (சாரல்) உறுதியான கொம்பை (கருங்கோல்) உடைய குறிஞ்சிப்பூவிலிருந்து தேனீக்கள் தேனை எடுத்துக் கூடு கட்டும் (இழைக்கும்) நாட்டின் தலைவனோடான (நாடன் – குறிஞ்சி நிலத் தலைவன்) எனது காதல் (நட்பு) சிறப்பானது (அதைப் பற்றி நீ சந்தேகப்படாதே!)

எனது ஆசிரியப்பா: 
கவிதை இலக்கணம் கற்க வந்தால்
கவிதை இயற்றிக் காகிதம் நிரப்புக,
எழுத எழுதத்தான் வசப்படும்
இலக்கணம் என்ற இனிய ஜாலமே!

உங்கள் பாக்களை (பா முயற்சிகளை) கருத்தில் இடலாம - அனைவரின் விமர்சனத்திற்கும் தயாராக / என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க!)

அடுத்த பாடம்: அடி 

2 கருத்துகள்:

  1. எளிமையாக ஆனால் விளக்கமாக எழுதுகின்றீர்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா!
      மிக நுணுக்கமான, விரிவான, ஆழமான நம் இலக்கணத்தை இன்றைய ‘கவிஞர்’கள் கண்டுகொள்ளாமலே கவிதை எழுதுவது எப்போதுமே என்னை உறுத்தும் ஒரு விடயம்...
      மரபுரைகளின் ‘சுருங்கக் கூறல்’ ‘கூறியது கூறாமை’ ஆகிய கோட்பாடுகளுக்கு வெளியே, ஒரு வகுப்பறையின் சூழலில் அலசினால் இவை மிக எளிமையாக கற்றுக்கொள்ளக் கூடியவையே என்று நிறுவுவதே என் நோக்கம்... தங்களைப் போன்ற சான்றோரின் ஆதரவும் கிடைப்பது மிகுந்த மகிழ்வும் உந்துதலும் அளிக்கிறது!

      மீண்டும் நன்றி :-)

      நீக்கு